Thursday, 25 August 2016

தலித்தியம் கற்பிப்பது தான் என்ன?





கல்லூரிகளில் பாடப்பிரிவுகள்...
உலகமயமாதலின் விழைவாக கலாசாலைகளில் மிகவிரைவாகவே கலாசாலை (பல்கலைக்கழகங்கள்) களில் கல்வித் திட்டப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கு தேசங்களில் உள்ள மானிடவியல், தொல்பொருளியல், சமூகவியல் எனத் துறைகளைப் போன்று உலகின் பல பாகங்களிலும் வெவ்வேறு பாடநெறிப்பிரிவுகள் பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்பட்டது. ”கல்விசார் உலகில் மானிடவியல், சமூகவியல், உளவியல் வரலாறு என்ற பாடநெறிகளுக்குள் அந்த பாடநெறிகளை கற்றுக் கொள்ளுகின்ற போது அணுமுறைகள் பற்றி பார்வை முக்கியமாக இருக்கின்றது. இந்த அணுமுறையூடாக பாடநெறியை கற்றுக் கொள்கின்றனர். (இந்த அணுகுமுறைகள் வர்க்கம் சார்ந்து இருக்கின்றது ஒரு புறமிருக்க) இவர்கள்
Sturcturalism, functionalism (Emil Durkheim), sturctural functionlism (Levi Struss),  contradictions perspective, Marxism, நவமார்க்சியம் (அகநிலைவாத) என்று புதிய பன்முக ஆய்வு முறைகளை புகுத்துவது இன்றைய கலாசாலை வட்டத்தில் கற்பிற்கப்படுவதுதாம்.

அறிவுசார் ஊழியர்களை மறுவுற்பத்தி செய்கின்ற போது உருவாக்கப்படும் அறிவுசார் பிரிவினர்கள் சமூகத்தளத்தில் தமது புலமைகளை வெளிப்படுத்த நுழைகின்றனர். இவர்களின் கல்வித் தகமை எல்லோரிடமும் இருப்பதில்லை (அறிவு வேறு) இவர்கள் கொண்டுள்ள பல்வேறு இசங்களை (ism) வைத்துக் கொண்டு தம்மை மற்றையவர்களை விட மேலான்மை கொண்டவர்களாக இருத்திக் கொள்கின்றார்கள். இவ்வாறான இசங்களின் (ism) அணுமுறையில் இருந்து வெளியாகும் எழுத்துக்களினால் ஏற்படும் மயக்க நிலை இந்தச் சமூகத்தில் உள்ள அறிவுசார் பிரிவினர்களில் உண்மையான மக்கள் நலம் கொண்டவர்களிடயே ஆழுமையையும்,  மயக்கத்தையும் மேற்கொள்கின்றார்கள்.          

ஐரோப்பிய சூழலில் பல்கலைக்கழகங்களில் தன்னார்வ நிலையில் உந்தப்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு விடயங்களின் மேல் ஆர்வம் கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் ஆர்வத்தை பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்தியச் சூழலில் புதிய விடயங்களையும், தத்துவவிசாரணை, ஆர்வமான விடயங்களைத் செயற்படுத்தல், அறிந்து கொள்ளல் அன்றாட நிகழ்வாகும். இவ்வாறான ஒரு அறிதல், கலாச்சாரச் சூழல் இருந்து கொண்டு வருகின்றது. இவ்வாறே தமிழகத்தில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடாக உயர்கல்வி பெற்றவர்கள். கற்ற கல்வியை, புதிய விடயத்தை ஆலையில்லா ஊரில் இலுப்பங்காய் சக்கரை போல புதிய யாம்பவான்கள் முளைக்கின்றார்கள் எனலாம். “கல்லூரி, பல்கலைக்கழக மட்டடங்களில் நடைபெறும் இத்தகைய விவாதங்கள் போக, பல தன்னார்வக் குழுக்கள் பின்நவீனத்துவக் கருத்துக்களை பரப்புவதில் ஆர்வம் காட்டுகின்றன. சென்னையிலும் மதுரையிலும் உள்ள இறையியல் கழகங்கள் பல்வேறு தரப்பு அறிவுஜீவிகளைக் கூட்டி இது குறித்து கருத்தரங்குகள் நடத்துகின்றன. (பக் 45 வெ. கிருஸ்ணமூர்த்தி ஆய்வுவட்டக கட்டுரைகள் 5)

நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்து வெளியே வந்த கல்வியாளர்கள் தாம் படிக்கும் நாட்டில் கல்விக்கான ஆலோசனை குழுவில், மாணவர் அமைப்பில் உறுப்பினர்களாக வந்தாலே பத்திரிகைகளில் விளம்பரம் இடுபவர்கள். இவர்கள் புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் இடத்தில் தம்மைவிட உயர்ந்தவர்கள் இல்லை. தாம் சொல்வதுதான் உண்மையானது, தமது சிந்தனையை மீற எவருமில்லை, இவர்கள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல விடயங்களை முன்னிறுத்திவிட்டு சென்றிடுவர்.  இவ்வாறான குட்டிமுதலாளிய சிந்தனை கொண்ட படைப்பாளிகளின் புதிய கோட்பாட்டு உருவாக்கத்தின் பின்னால் உலகின் மிகவும் வெற்றி கொண்ட தத்துவமாகிய மார்க்சீய லெனினிய மாவோ சிந்தனை தனிநபர்களின் சிந்தனை வளர்ச்சித் தரத்திற்கு கீழ் இறங்க வரவேண்டும் என்று கருதுவதே தன்னிலை-மையவாதமாகும். தன்னிலைமையவாதம் தனிமனிதனின் இருப்பையும், சுய சிந்தனை, சுயசெயற்பாடு, சுயதேவை என்பனவற்றை முதன்மை கொண்டு செயற்படும் போக்காகும். இவ்வாறான தனித்துவாத, தன்னார்வ, சுயவிளம்பிகளினால் முன்கொண்டுவரப்படும் சிந்தனைகள், கோட்பாடுகள், அணுகுமுறைகள் சமூகத் தளத்தில் பெரும் எதிர்ப்புரட்சிகர சூழலை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான அறிமுகப்படுத்தலில் தமிழிற்கு மார்க்சீய அணுகுமுறையை, நடைமுறைத் தளத்தில் இருந்து செயற்பட்ட பேராசிரியர்கள் திரு கைலாபதி, திரு சிவத்தம்பி,  தமிழகத்தில் பேராசிரியர் திரு வானமாமலை போன்றவர்கள் கிடைத்தார்கள். இவர்கள் அணுகுமுறை மார்க்சீயத்திற்கு அப்பால் இருந்து நடைமுறை அரசியலில் சமூக மாற்றம் பற்றிய செயற்பாட்டில் இருந்துள்ளார்கள். இவர்களின் நடைமுறைச் ரீதியான சமூக மாற்றம் பற்றிய தூண்டுதல் இருந்த காரணத்தினால் அவர்கள் புரட்சிகர அமைப்புக்களிலும் தாக்கத்தை செலுத்த முடிந்தது. ஆனால் அணுகுமுறை மார்க்சீயர்கள் அவ்வாறு அல்ல. அவர்கள் சமூக தளத்தில் பிழைப்பிற்கான ஆய்வுத் தளத்தில் செயற்படுகின்றது. இந்த நபர்களின் செயற்பாடுகள் சமூகத்தின் எதிர்விளைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
புரட்சிகர மார்க்சியம் சமூகமாற்றத்திற்காக உழைப்பவர்களின் கைகளில் இருக்கின்றது. சமூக மாற்றத்திற்காக அமைப்பு ரீதியாக உழைக்கின்றனர். இதற்கு வெளியே சமூக ஆவலர்கள்,  புத்திஜீவிகள் என்ற போர்வையில் மார்க்சீயத்தை பயன்படுத்துகின்ற போது, அவர்களை மார்க்சீயர்களாக (கம்யூனிஸ்டுகளாக) கணிப்பிடும் நிலை எமது சமூகத்தில் இருக்கின்றது. இவ்வாறான ஆய்வாளர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தலைமுறை அவர்களின் பின்னால் சென்றுவிடுகின்றது. மார்க்சீய ஆய்வாளர் என்ற நிலையில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பியாகும். இவர் மார்க்சீயராக அறிமுகப்படுத்தப்பட்டதும், அவர் பின்பற்றிய தேசியப்பிரச்சனைசார்ந்த அரசியல் காரணமாகும். ஆனால்  இலக்கிய, வரலாற்று, சமூகவியல் ஆய்வில் அவரின் மார்க்சிய அணுகுமுறையின் பங்களிப்பினை மறுதலிக்க முடியாது. எனவே அணுகுமுறை மார்க்சியம், புரட்சிகர மார்க்சியம் போல்  நடைமுறை ரீதியாக புரட்சிக்கு பங்களிக்க முடியாது. ஆனால் ஒரு கட்சி இவ்வாறான அறிவாளிளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலைத் தேசங்களில் அணுகுமுறை மார்க்சீயம் கற்பிக்கப்படுவதும், அது வளர்ந்த நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறே வெவ்வேறு அணுகுமுறை கோட்பாடுகளும் மேலைத் தேசங்களில் இருக்கின்றது. இந்த வகையில் மேற்கு தேசங்களில் கல்வி கற்ற இந்திய புத்திஜீவிகள் தாம் படித்தவற்றை இந்தியாவில் கொட்டியிருக்கின்றார்கள். மேற்கத்தைய தேசத்தில் அல்லது மேற்கத்தை பாடத்திட்டத்திற்கமைய கல்விகற்றவர்கள் புதுமையானதாக சொல்லாடலாகவும், புதுக்கண்டுபிடிப்பாகவும் சமூகத்தின் முன் வைத்துள்ளனர். (இந்த சகதி வேலை இலங்கையில் இன்னும் முழுமையடையவில்லை.)
சமூகத்தளத்தில்...
பல்கலைக்கழக ஆய்வுகளை பொதுதளத்திற்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களை பல்கலைக்கழங்களில் பயில்பவர்களும் சரி, படித்து வெளியேறியவர்களும் சரி பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றார்களா என்பது கேள்விக்குறியே. எனினும் ஒரு வர்க்கச் சிந்தனையை விதைப்பதற்கு என்று உருவாக்கப்படுபவர்கள் இந்தவரையறைக்குள் கொண்டுவர முடியாது. மனிதர்களிடையே வர்க்க உணர்வை சிதைக்கும் வகையான செயற்பாடுகளும்,  முதலாளித்துவ அமைப்பு தன்னை அம்பலப்படுத்துவதை தடுப்பதிலும், தன்னியல்பு நடவடிக்கைகளை ஊங்குவிக்கும் பாங்கும் நிறைந்ததே இந்த சமூக பொருளாதார அமைப்பாகும்.
இதில் வேடிக்கையான விடயவென்னவெனில் மார்க்கீய பின்புலத்தைக் கொண்ட அமைப்புக்களும் விளிம்புநிலை என்ற சொல்லாடலுக்குள் பலியாகியிருக்கின்றது. இலங்கை தலித்தியவாதிகள் எவ்வித தத்துவ விசாரணையின்றி தலித்தியம், விளிம்புநிலை என்று இந்தியக் உற்பத்தியை இலங்கைக்கு இறக்குமதி செய்கின்றனர்.  இலங்கை தலித்துவவாதிகளுக்கு தத்துவ விசாரணை பற்றி எவ்வித அக்கறையும் இல்லை. இவர்களிடம் தலித்தியம், விளிம்பு நிலை என்று கேட்டால் 15 வருடங்களுக்கு முன்னரே கோட்பாட்டுப் பிரச்சனை பற்றி ஆராய்ந்து தீர்த்துவிட்டதாக கூறுகின்றனர்.
கலாசாலை ஆய்வுகள், கலைச்சொற்கள் என்பவற்றை பொதுவெளிக்கு கொண்டு வருவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்றைய வேளையில்  கல்தோன்றி மண்தோற்றாக் காலத்து மூத்தகுடி என்று தமிழர் பெருமையையும், தேசியபெருமிதத்தை வெளிக்கொண்டு வருவதற்கும் கல்வெட்டுக்கள், ஆய்வுத் தகவல்களைக் வெளியிடுகின்றார்கள்.  ஆனால் ஆராய்ந்து பார்த்தால் இன்னும் ஆழமாகச் செய்யவேண்டிய ஆய்வுகளும், முழுமைபெறாத ஆய்வுகளையும் முடிந்த முடிவாக  முன்வைக்கின்றார்கள். இதே சிக்கல் சாதியைப் பெருமையை நிலைநிறுத்துவதற்காக இலக்கியத்தில் இருந்து மேற்கோள் காட்டுகின்றார்கள். இவர்கள் ஆண்டாண்டு காலமாக கீழ் நிலை கொண்டு வஞ்சித்த நிலைக்கு பரிகாரம் காண்பதற்காக துடிப்பது புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் இலக்கியங்களில் கூறப்படும் காரவா, வேளீர், பரதவர், மறவர், மல்லர்- மள்ளர் போன்ற இனக்குழுமங்களில் இன்றைய பொழுதில் தூய்மையான ஒன்று இருக்க முடியாது. இனக்குழுமங்கள் தோன்றி, மருவியிருக்கும். இங்கு இந்த இனக்குழுத்தில் வந்தவர்கள், அரசர்களாகவும், பிரபுக்களாகவும், தொழிலாளர்களாக மாற்றம் கொண்டு சமூகம் பிரிகின்றது. அரசர்களும், பிரபுகுலத்தவர்களும், சமயகுரவர்களும் ஒரு நெருங்கிய வர்க்கமாக இருக்க பெரும்பான்மையானவர்கள் உழைக்கும் வர்க்கமாக மாற்றம் பெறுகின்றார்கள். இந்த பெரும்பான்மை மக்களின் வரலாறு எழுத்தில் உள்ள உயர்வர்க்கத்தின் வரலாற்றில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.
இலக்கியத்தையும், அரசவம்சத்தின் வரலாற்றை வைத்துக் கொண்டு இன்றைய காலத்தில் வாழும் சாதிகளை இணைத்து பேசுது ஒரு வகை தூய்மைவாதமே. ஒரு ஆய்வாளரின் அகத்தேவை ஒரு ஆய்வின் முடிவைத் தீர்மானிக்கின்றது. சிலவருடங்களுக்கு முன்னர் மேற்கு இந்திய கடல்பிரதேசத்தில் கடலடி குடியிருப்பை கண்டடைந்த ஆய்வாளர்கள், அது கிருஸ்ணின் பிறப்பிடமான துவாகாவைத் தேடிச் சென்றார்கள். இது இந்துத்துவா சிந்தனையின் தேவையில் அமைந்து கொண்ட இலக்காகும். ஆனால் 7000 வருடங்களுக்கு முன்னர் கிருஸ்ணவழிபாடு இருந்ததாகக் காட்டும் ஆவல். ஆகவே ஒரு ஆய்வாளின் அகமுடிவில் இருந்து ஆய்வினை மேற்கொள்ள முடியாது.
வரலாற்றுத் தடயங்கள், எழுத்துக்கள், சமூகத்தில் வழங்கும் ஐதீகங்கள் இவற்றை பன்முகப்பட்ட ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். அதாவது மானிடவியல், சமூகவியல், தொல்பொருளியல், சமூக உளவியல், வரலாற்று என பன்முகப்பட்ட ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய ஆய்வுகள் முழுமையான வளர்ச்சியடைந்த நிலையில் தான் தமிழர் சார்ந்த ஆய்வுகள் இருக்கின்றது.

விளிம்பு நிலை  (Liminal stage ) 
விளிம்பு நிலை என்ற சொல்லிற்கான உண்மையான அர்த்தத்தினை கண்டடைய வேண்டிய தேவை இருக்கின்றது. இந்தச் சொற்பதம் என்பது பல மயக்கத்தை கொடுத்துள்ளதாகவே கருதவேண்டியிருக்கின்றது. இங்கு (marginalization) தரப்படுத்துதல் அல்லது ஒதுக்குதல், ஒடுக்கப்படுத்தல் (oppressed, exploited) என்று சுரண்டப்படும் மக்கள் தொகுதியை கூற பயன்படுத்தப்படும் பொது சொற்பதங்களாகும். ஆனால் ஒடுக்கப்படும், சுரண்டலுக்கு உள்ளாகும் விளிம்பு நிலை என மக்கள் கூட்டத்தினை விழிப்பதற்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் மயக்கத்தை ஏற்படுத்துகின்றது. இங்கு மேற்கு தேசங்களில் பயன்படுத்தப்படும் அரசியல் சொற்பதங்கள் தமிழ்படுத்துவது ஒன்றும் இலகுவானது அல்ல. உதாரணத்திற்கு லும்பன் (உதிரிப்பாட்டாளி)  பூர்சுவா (முதலாளித்துவ) வர்க்கம்  என்ற சொற்தொடர்கள் பயன்பாட்டில் உள்ள போதிலும் அதற்கு நிகரான சொற்கள் தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் இருக்கின்றது. மேற்கண்ட சொற்கள் அரசியல் அரங்கில் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. ஆனால் விளிம்பு நிலை என்ற சொற்பொருள் குறித்து அரசியல் உலகில் பரீட்சையம் உள்ளவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை. ஆனால் இணைய விவாதங்களை நோக்குகின்ற போது இந்தச் சொல்லாடல் பின்னவீனத்துவாதிகளினால் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என அறிய முடிகின்றது.

அடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதார சமூக அடுக்கமைவில் மிகவும் பின் தங்கிய மக்கள் குழுவாகும். இவர்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக வரையறை செய்வது கடினம். எவ்வளவு உழைத்தும் தொடர்ந்தும் பின் தங்கி நிற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள். எளிமையான வாழ்வு முறைகளைத் தேர்ந்த துறவிகள் போன்றோர், குடிபோதை போன்ற தீயபழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பின் தங்கியோர், நோய் சமூகக் கட்டமைப்பு போன்ற இதர காரணிகளால் பின் தங்கியோர் என பல தரப்பட்ட மக்கள் அடித்தட்டு வர்க்கம் என்ற வட்டத்துக்குள் வரக்கூடும்.  ஆங்கிலத்தில் working class, underclass  என்றும் வேறுபடுத்திக் காட்டுவர். அதற்கு சற்று ஒத்து தமிழிலும் உழைப்பாளிகள்,  விளிம்பு நிலை மக்கள் என்ற சொல்லாடல்களும் உண்டு. (wikipedia)

சமூகத்தளத்தில் இயங்கும் நபர்களின் கருத்துக்கள் சில.......
marginal என்பதை இங்கு விளிம்பு நிலை என்றே அழைத்து வருகிறார்கள், அதற்கு கீழறு நிலை என்றும் ஒரு சொல்லைப் பயன்படுத்தலாம், ஆனால் சில சொற்கள் பொது வழக்கிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் அதையே நாம் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.””
விளிம்பு நிலை மனிதர்கள் என்பவை மிகவும் ஒடுக்கப்பட்ட, சமூகத்தின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு, பொருளீய, பண்பாடு, சமூக பிரிவினரைக் குறிக்கிறது. இது ஒரு பின் நவீனத்துவ அணுகுமுறை. வர்க்கமற்ற சமூக வகையினம் இருக்கிறது பார் என்று சொல்வதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது என் கணிப்பு. வர்க்கப் பார்வையைத் தவிர்ப்பதற்கான இந்த முயற்சி வரவேற்கத் தக்கதல்ல. அனைத்து சமூக,  பண்பாட்டு, ஆதீதன மன ரீதியான ஒடுங்கிய நிலையையும் நீங்க வர்க்கப் போராட்டத்தின் மூலமே ஒழிக்க முடியும் என்பது என் கருத்து.”
 ஒருங்கிணைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தைத் தாண்டி ஒருங்கிணைக்கப்படாத,  முடியாத உதிரிப்பாட்டாளிகள் வர்க்க ரீதியிலும் சமூக ரீதியிலும் வாழ்கையின் சமூக வரலாற்று அடுக்குகளின் அடித்தளத்தில் அழுத்தப்பட்டு துன்பத்தில் வாழ்பவர்களே விளிம்பு நிலை மனிதர்கள்!!.”
விளிம்பு நிலை என மார்க்சிய வரையறை ஏதும் இல்லை தோழர். ஒடுக்கும் இனம் ஒடுக்கப்படும் இனம் என இரண்டு மட்டும்தான் உண்டு தோழர். மனித உரிமை விளிம்பு நிலை என்ற வார்த்தைகள் ஏகாதிபத்திய ஆதரவு தொண்டு நிறுவனங்களும், பின் நவீனத்துவ கும்பலும் புதிய இடது கும்பலும் பயன்படுத்தும் வார்த்தைகள்..”

விளிம்பு நிலை என்ற சொல்லாடல் தனித்தே வெறும் சொல்லாக தமிழ் பரப்பில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்கள் கூட்டத்தினை எவ்வாறு விழிக்கின்றது என்பதை அறிய வேண்டும். விளிம்பு நிலை என்ற சொல்லாடல் மானிடவியல் பாடநெறிக்கு உட்பட்டதாகும். மானிடவியல் பாடநெறி எடுத்துச் சொல்லும் விளக்கத்தினை விளிம்பு marginal -Victor Turner) என்று பார்க்கின்ற போது பின்வருமாறு வரையறுக்கின்றது. எமது முன்னோர்களுக்கு ஏன் சடங்குகளைச் செய்கின்றார்கள்? பழங்குடியினர் ஏன் அவ்வாறு சிந்திக்கின்றார்கள்? அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பதை மார்க்சீய நோக்கில் இருந்து பார்ப்பதற்கு அப்பால் உருவாக்கப்பட்ட பலகோட்பாடுகளைப் போலவே விக்ரர் ரேனரின் கோட்பாடாகும்.  ரேனரின் (Turner)  சடங்கியல் தளத்தில்  மூன்று நிலைகளைக் கூறுகின்றார். ஏன் மனித சமூகத்தின் அவ்வாறான பழக்கங்கள் இருக்கின்றது என்பதையும், மனித கூட்டம் இந்தக் கட்டங்களை தாண்டிச் எவ்வாறு செல்கின்றது என்பதை விளக்குகின்றனர்.
சமூகத்தில் விளிம்பு நிலையினர் (marginals) என்றும் தனித்த பிரிவினரையும் டர்னர் இனங்காண்கிறார். இவர்கள் மேற்கூறிய புறவயத்தாரிடமிருந்து வேறுபட்டவர்கள் விளிம்பு மக்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவின் பேராளர்களாக இருப்பர். அதோடு அவர்கள் சமூகம், பண்பாட்டு நிலைகளில் தனித்தன்மையுடன் விளங்குவர். சில சமயங்களில் ஒரு குழுவினர் மற்றுறொரு குழுவினருக்கு எதிர்நிலையினராகக் கூட இருப்பர். தாங்கள் தாழ்ந்த பிரிவிலிருந்து தோன்றியவர்கள் என்ற நிலை, நடைமுறையில் அமைப்புக்கு எதிராகமீசமூகம்கட்டமைக்கின்ற பண்பைக் கொண்டிருப்பதன் மூலம் தங்களை உயர்ந்த குழுவினராகக்  கருதிக் கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்கள்அமைப்புகுறித்து விமர்சனம செய்பவர்களாகவும், எதிர் - அமைப்பைக் கட்டமைத்து மீசமூகம் ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பர். எழுத்தாளர்கள், கலைஞர்கள், தத்துவவாதிகள், ஆகியோர் விளிம்பு நிலையினராக அமைகின்றனர் (225 பண்பாட்டு மானிடவியல் மணிவாசகர் பதிப்பகம்,  1999-ஜீலை பக்தவத்சலபாரதி)

இனக்குழுமங்களாக வாழ்ந்த சமுதாயத்தில் மனிதர்கள் செய்யும் சடங்குகளுக்கும்,  வழிபாடுகளுக்கும் விளக்கங்களை தேடிச் செல்லும் மானிடவியாளர்கள். அந்த இனக்குழுமத்தின் சின்னங்களின் குறியீடுட்டு அர்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இனக்குழுமம் என்ற நிலையில் இருந்து தேசிய இனங்களாக உருவான பின்னரும் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது.
கிறிஸ்தவத்தில் பிறக்கும் பிள்ளைகள் பாவத்துடன் சேர்ந்தே பிறப்பதாகவும், சாத்தான் குடியிருப்பதாகவும் கூறுகின்றது. கத்தோலிக்க சபையின் கருத்தானது எல்லோரது பாவங்களுக்காகவே யேசு மரித்தார் எனக் கூறுகின்றது. கடவுளைப் பெறுவதன் மூலமே பாவத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள், நரகத்திற்கு செல்வதில் இருந்து தப்பிக்க முடியும் எனக் கருதுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை திருமுழுக்கு பெறாதவர்கள் அனைவரும் பாவத்தில் இருந்து விடுதலை பெறமுடியாது. இவர்கள் சாத்தானின் பிள்ளைகளாகத் தான் இருக்க முடியும் எனக் கருதுகின்றது.
இதனை ஒரு நிலை அதாவது மனிதர்கள் பாவத்திற்கு உட்பட்டிருக்கும் நிலை. இதில் இருந்து அடுத்த நிலைக்கு செல்லும் காலம் ஒன்றிருக்கின்றது. அங்கு ஞானஸ்ஞானம் என்றும் சடங்கினை பெறும் வரையில் அவர் ஒரு கிறிஸ்தவராக ஆக முடியாது. இதற்காக சடங்கினை ஏற்படுத்தும் காலம் ஒன்றிருக்கின்றது. இந்தக் காலம் 30 நாட்கள் அல்லது விரைவாக சடங்கினை நிலைவேற்றிக் கொள்கின்றார்கள். இவ்வாறே பழங்காலத்திலிருந்து தைப்பொங்கல்,  ஆடிக்கூழ் போன்ற நன்றிக்கடன் செலுத்தும் விழாக்களும், இறந்தவர்களின் ஆவியைச் சாந்தப்படுத்த நிகழ்த்தும் சடங்குகளும் அடங்கும்.
கன்னிப்பெண்கள் (திருமணமாகாத) இறந்தால், கற்பிணிப்பெண் இறந்தால் அதற்கான சடங்குகளை செய்கின்றனர். கர்ப்பிணிப், கன்னிப்பெண் இறந்தால்  அவர்களின் ஆவிக்கு சடங்கு செய்ய வேண்டும் என்ற ஐதீகம் உள்ளது. இறந்தபின்னர் சமாதானமற்று, நிம்மதியற்று அலையும் ஆவி, (ஆன்மா) என்பது முதல்நிலை (புறவய மனிதர்கள் நிலை (outsiderhood) அந்த ஆவிக்கு (ஆன்மா) சடங்கிற்கான தயாரிப்புக்களும், சடங்குமுறைகளும், சாந்தப்படுத்த எடுக்கும் முயற்சிகளும் இரண்டாம் நிலை (விளிம்பு நிலை (marginality - Liminal stage) இறந்த மனிதர் இங்குமில்லை அங்குமில்லை என்ற நிலையைக் குறிக்கின்றது. இதனை தான் மானிடவியலில் விளிம்பு நிலை என்று வரையறுக்கப்படுகின்றது. அங்குமில்லை இங்குமில்லாத நிலையில் இருக்கின்ற இறந்தவரின் ஆன்மாவின் சாந்திக்காக செய்யப்படும் சடங்குகள் ஊடாக (அமைப்பு தாழ்வு நிலை (structural inferiority) இறந்த  ஆன்மாவுக்கு சாந்தியையும் சமாதானத்தை ஏற்படுத்துவதுதாகும்.
இதற்கு இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போமானால் யாத்திரைக்கு செல்லும் காலங்களில் சகல பழக்கவழக்கங்கள், குடும்ப உறவுகள் எல்லாவற்றை ஓடுக்கி வாழ்கின்றார். யாத்திரையை தரிசனம் செய்கின்றபோது அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு யாத்திரையை மேற்கொள்கின்றார். (விளிம்பு நிலை) ஆனால் யாத்திரை முடிந்த பிற்பாடு வழமையான வாழ்க்கையில் ஈடுபடுகின்றார். இவரின் யாத்திரை பூரணம் அடைவதற்கு யாத்திரிரையினால் ஏற்படும் மனச்சாத்தியும், திருப்தியுமாகும்.  யாத்திரை சடங்கு ஒரு நிலையில் இருந்து இன்னொரு (transformation) நிலைமாற்றுவது இந்த இடைப்பட்ட காலத்தை விளிம்பு நிலையாகும். அது இங்குமில்லை அங்குமில்லை என்ற இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பதைக் குறிக்கின்றது.
விளிம்பு நிலை என்கின்ற போது இவர்கள் மனிதர்களாக அல்ல மாறாக இவர்கள் ஒரு இடைநிலையில் இருக்கின்றார்கள் என்று தான் விளிம்புநிலை வரையறை விளக்கம் கொடுக்கின்றது. இவர்கள் மக்களாக இருக்கின்றார்கள். அது எவ்வாறு சாத்தியமாகும் இதுதான் இங்கு எழும் கேள்வி. மார்க்சியம் உதிரிப் பாட்டாளிகள் என்று பொருளாதாரத்தில் ஸ்திரம் அற்ற சமூக உறுப்பினர்களை வரையறுக்கின்றது. இவர்கள் எந்த வேளையிலும் வேலை கிடைக்கும் இடத்தில் உழைப்பை விற்க தயாராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
ஒரு மனித கூட்டம் பொருளாதாரத்தில் வலிமை இழந்தவர்களாக இருக்க முடியும். இதனால் படிப்புவாசனை, உங்களைப் போல் வாழாது ஒலைக் குடிசையில் தெருவோரத்தில் உரிமை பறிப்பட்டு வாழலாம். உங்களைப் போல உடுபுடவை உடுத்தாமல் இருக்கலாம், உழைப்பையே நம்பிய மனிதராக இருக்கலாம், தனிபாத்திரங்களில் உணவு கொடுக்கலாம். ஆனால் இவர்களை எந்த சடங்கு செய்து மனிதர்கள் என்ற நிலைக்கு கொண்டுவரப் போகின்றீர்கள். இவர்கள் என்ன தீட்டுப் பட்டா இருக்கின்றனர் அல்லது உடலை விட்டுப்பிரிந்த ஆவியாகவா உலாவுகின்றார்கள், அல்லது பாவத்துடன் பிறந்து பின்னர் ஞானஸ்தானம் என்ற சடங்கின் மூலம் பாவத்தில் இருந்து மீள்வது போல இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் சமூகத்தில் தாழ்வுற்ற நிலைக்குச் செல்லும் சமூகத்தின் உறுப்பினர்களை தலித்தியத்தைப் போலவே வர்க்க அமைப்பிற்குள் அமையமுடியாது என்று கருதுகின்றது. 
சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களை அங்குமில்லை இங்குமில்லை என்று புதிய கோட்பாட்டு வடிவம் கொடுக்கின்றார்கள். இங்கு பெறுமதியான மனிதர் உயிர்களைக் கூட அறிவியல் துறை வெவ்வேறு வடிவம் கொடுத்து தனது ஆய்வுப்புலமையை நிறுத்துகின்றது.

No comments:

Post a Comment